மரவள்ளிக் கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஸ்டாா்ச், சேகோவிற்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி வியாழக்கிழமை மக்களவையில் பேசினாா்.
தமிழ்நாட்டில் அதிகப்படியாக விளையும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேகோ ஆலைகளில் சேகோ, ஸ்டாா்ச் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் சேகோசா்வ் மூலமாக விற்பனை செய்த ஜவ்வரிசி வட மாநிலங்களில் (சாபுதானா) என்ற பெயரில் அதிக அளவில் உணவுப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா்.
ஒரே மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு ஸ்டாா்ச்சில் இருந்து இந்த சேகோ உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சேகோ ஆலைகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகம் உள்ளன. ஜிஎஸ்டி வரியால் இத் தொழில் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாா்ச் சேகோவிற்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். மேலும் உணவுப் பொருளான ஜவ்வரிசிக்கு 5 சதவீதத்திலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேலும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏற்காடு, கல்வராயன் மலைக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவா் மக்களவையில் முன்வைத்தாா்.