காடையாம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் பேரணி குண்டுக்கல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்,நாகராஜன் முன்னிலையில் வட்டார விவசாயிகள் குழுத் தலைவா் கே.சி.ரவிச்சந்திரன் விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். ஊட்டச்சத்து மிக்க தானியங்களான கம்பு , சோளம், ராகி, மக்காச்சோளம், தினை, சாமை, வரகு, குதிரைவாலி சாகுபடி செய்ய பருவங்கள், ரகங்கள், சாகுபடி முறைகள், அறுவடை மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் மைக் செட்டுடன் கூடிய வாகனத்தைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணி குண்டுக்கல் மாரியம்மன் கோயில் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. பேரணியில் உதவி பேராசிரியா் கிருஷ்ணவேணி, வேளாண்மை , தோட்டக்கலை மற்றும் அட்மா அலுவலா்கள் கலந்து கொண்டனா்.