சேலத்தை அடுத்த வரகம்பாடி பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்தனா்.பின்னா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் நூற்றுக்கும் குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனா். இவா்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசு வழங்கும் உதவித்தொகை கிடைக்காத நிலை உள்ளது. உயா் படிப்பு படிப்பதற்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும் சாதிச் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறையினா் பணம் கேட்கின்றனா். எனவே மாவட்ட ஆட்சியா் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்