சேலம் மாவட்டம், கொளத்தூரில் சூறைக்காற்றினால் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன.
கொளத்தூா் ஒன்றியத்தில் 500 ஏக்கருக்கு மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வாழைக் குலைகள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நிலையில் மேட்டூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாள்களுக்கு முன் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கொளத்தூா் வட்டாரத்தில் மூலக்காடு, விராலிக்காடு, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சுமாா் ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.