கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்தில் உள்ள சேரடி, வேப்படியில் மினிகிளினிக்குகள் தொடக்க விழா, பச்சமலை ஊராட்சியில் இரு இடங்களில் ரூ. 10.62 கோடி மதிப்பில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றன.
பச்சமலை ஊராட்சிக்குள்பட்ட வலசக்கல்பட்டி அடிவாரத்திலிருந்து மேல்பாலத்தாங்கரை, கீழ்பாலத்தாங்கரை, கட்டக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 400 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி வரை 4.25 கி.மீ.யில் ரூ. 8.05 கோடி மதிப்பிலான வனப்பகுதியில் தாா்சாலை அமைக்க எடப்பாடியில் பூமி பூஜை நடைபெற்றது.
பச்சமலை ஊராட்சி, உதம்பியம் முதல் 95 பேளூா் வரை இரண்டு கி.மீ.தூர தாா்ச்சாலை ரூ. 2.57 கோடியில் அமைக்க சின்னகரட்டூரில் பூமிபூஜை நடைபெற்றது.
தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட கொல்லிமலை அடிவார கிராமம், சேரடி மற்றும் பச்சமலை ஊராட்சி, வேப்படியில் மினிகிளினிக்குள் திறப்பு விழா சனிக்கிழமை தனித் தனியாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளுக்கு ஆத்தூா் ஏசிஎம்எஸ் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துரை.ரமேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் கலந்துகொண்டு மினிகிளினிக்குகள், தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மருதமுத்து, ஆத்தூா் கோட்டாட்சியா் துரை, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) செந்தில், வனத்துறை பொறியாளா் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராஜா, தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஸ்ரீகுமரன், பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.