சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் பசுமை சங்ககிரி இலவச நர்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் பசுமை இலவச நர்சரி பண்ணை மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு அமைப்புகள், தனி நபர்களுக்கும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுதினத்தன்று கரூரில் உள்ள வானகத்தில் உள்ள அவரது கல்லறைக்கு சென்று நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வந்துள்ளனர். தற்போது தீ நுண்மி தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி நம்மாழ்வாருக்கு பசுமை சங்ககிரி இலவச நர்சரி பண்ணையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச்செயலர் எம்.சின்னதம்பி தலைமை வகித்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, நிர்வாகிகள் தினேஷ், பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், முருகானந்தம், சுந்தர், ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர் தினேஷ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.