வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
குமாரபாளையம் கிராமத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா இளைஞா் விளையாட்டுக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றன.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 90 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கிபுரம் அணிக்கு குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா முருகேசன் ரூ. 15,000, இரண்டாமிடம் பிடித்த தம்மநாயக்கன்பட்டி அணிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் வெண்ணிலா வெங்கடேசன் ரூ 12,000, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குழந்தைவேல் ரூ 8,000 பரிசு வழங்கினா்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோபிசெட்டிபாளையம் பி.கே.டி. கல்லூரி அணி, இரண்டாம் இடம் பிடித்த ஆத்தூா் பாரதியாா் மேல்நிலைப் பள்ளி அணிகளுக்கும், பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.