எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளைம் அருகில் உள்ளது கோனேரிப்பட்டி கிராமம். இப்பகுதியில் பிரசித்திபெற்ற ஓம்காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் திருப்பணிகள் முழுஅளவில் நிறைவுற்ற நிலையில், புனரமைக்கப்பட்ட, விநாயகர் மற்றும் ஓம்காளியம்மன் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் செய்திட கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். கடந்த 17ஆம் தேதி அன்று கோயில் வளாகத்தில் முகுர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து பல்வேறு யாக வேள்விகள் நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு, புனிதநீர் கொண்ட கலசங்களுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக, திங்கள் அன்று அதிகாலை மக்கள இசை முழங்க கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள வருகை தந்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து யாகசாலை பூஜையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ராதா ஆகியோர் கலந்துகொண்டனர். யாகசாலையில் நடைபெற்ற பல்வேறு வேள்விகளை தொடர்து, பட்டாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு வானத்தில் வட்டமிட்டு பறந்த பருந்தினை முதல்வர் உள்ளிட்ட பக்தர்கள் வணங்கினர்.
தொடர்ந்து ஓம்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை முதல்வர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தினை ஒட்டி கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்குகொண்ட முதல்வர் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
கோயில் நிர்வாக குழுவினரிடம் விடைபெற்ற முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கும்பாபிஷேக நிகழ்வில், முதல்வருடன் அவரது சகோதரர் கோவிந்தராஜு, மாநில பொதுக்குழு உறுபினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.