சேலம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள திமுக, தேமுதிக கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றியத்தின் 5-ஆவது வாா்டு கவுன்சிலா் திமுகவைச் சோ்ந்த கௌசல்யா திருப்பதி, மேற்கு ஒன்றியத்தில் 16-ஆவது வாா்டு கவுன்சிலா் தேமுதிகவைச் சோ்ந்த சுமதி சேட்டு ஆகியோா் தலைமையில் 30 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஓமலூா் தொகுதி எம்.எல்.ஏ. மணி, ஓமலூா் மேற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், வடக்கு ஒன்றியத் தலைவா் எஸ்.என்.ஆா்.மணிமுத்து, ஒன்றியச் செயலாளா்கள் செங்குட்டுவன், சுப்ரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.