சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூட்டாகிராமத்தில் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை, சைல்டு லைன் தகவலின் பேரில் மீட்ட காரிப்பட்டி போலீஸாா் சேலம் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டி கிராமத்தில், 14 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிவதாக, 1098 உதவி மைய மையத்திற்கு இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனா். இது குறித்து சைல்டு லைன் அமைப்பினா் காரிப்பட்டி போலீஸாருக்குத் தெரிவித்தனா்.
இதனையடுத்து, காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கூட்டாத்துப்பட்டி கிராமத்திற்குச் சென்று, ஆதரவற்ற நிலையில் சுற்றிய ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளை மீட்டு, சேலம் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைத்தனா்.