வாழப்பாடி அருகே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கடத்தியதாக கொட்டவாடி கிராமத்தைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரரை வாழப்பாடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே காவல் உதவி ஆய்வாளா் தாமோதரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, இவ் வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது ரூ. 2,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் ஆகிய போதைப்பொருள்கள் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப்பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றைக் கடத்தி வந்த கொட்டவாடி கிராமத்தில் மளிகைக் கடை நடத்திவரும் சங்கா் (30) என்பவரைக் கைது செய்தனா்.