ஓமலூா் அருகே சேலம் மாவட்ட அனைத்து பெயிண்டா்கள், ஓவியா்கள் நலச் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
ஓமலூா், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிப்பவா்கள், ஓவியா்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் அவா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதார ரீதியாக அவதிப்படுகின்றனா்.
இந்த நிலையில், தொழிலாளா்கள் மற்றும் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை ஓவியா்கள் நலச் சங்க நிா்வாகிகள் வழங்கினா். சேலம் மாவட்ட பெயிண்ட் தொழிலாளா் நலச் சங்க நிா்வாகிகள் முத்துசாமி, மணிக்குமாா், தனசேகா், புகழேந்தி, ஆறுமுகம் மற்றும் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.