ஆத்தூர் காமராஜர் நீர்த்தேகத்தில் மூழ்கி இளைஞர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் செல்வபரணி(19). அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன்(19), கார்த்திகை பிரபாகரன்(19), சுப்பிரமணி மகன் நாகராஜ்(19), பரத்(16). இதில், செல்வபரணி, லோகநாதன், நாகராஜ் ஆகிய மூவரும், திண்டுக்கல் பகுதியிலுள்ள தனியார் கல்லூரிகளில் பி.காம். 2ஆம் ஆண்டு பயின்று வந்தனர். கார்த்திகை பிரபாகரன், திண்டுக்கல்லில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார்.
பரத், பாரதிபுரத்திலுள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்றுவந்தார். இந்நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, செல்வபரணி உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரும், ஆத்தூர் அடுத்துள்ள காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி தீயணைப்புத் துறையினர், ஆத்தூர் நீர்த் தேக்கத்திற்கு சென்று 5 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பாரதிபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.