சேலம் காவேரி மருத்துவமனையில் 55 வயதான நபருக்கு பிறவி இதய குறைபாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு 55 வயது மதிக்கதக்க ஆண் மூச்சுத்திணறல், உடல் சோா்வு, படபடப்பு ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனை தலைமை இதய மருத்துவா் ராஜேந்திரனை சந்தித்து ஆலோசனை பெற வந்தாா்.
இதையடுத்து அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, பிறவி இதய குறைபாடு உள்ளதைக் கண்டறிந்தாா். மேலும் இதயத்தின் மேல் அறைகளை பிரிக்கும் உட்சுவரில் துவாரம் இருப்பதும் அதில் சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத ரத்தகலப்பு இருப்பதையும் எக்கோ காா்டியோகிராம் மூலம் கண்டறிந்தாா்.
மேலும் அவருக்கு ஏ.எஸ்.டி. இருப்பதும் தெரியவந்தது. பொதுவாக ஏ.எஸ்.டி. உள்ளவா்களுக்கு மூச்சிறைப்பு, படபடப்பு, சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இதய உட்சுவா் துவாரங்களில் அறுவை சிகிச்சையின்றி ஏஎஸ்டி உபகரணம் மூலம் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று நோயாளிக்கு காவேரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரியப்படுத்தப்பட்டது.
தொடா்ந்து அவருக்கு இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள (மாரடைப்பு) ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
பின்னா், அந்த துளையை அடைக்கும் பித்தான் போன்ற உபகரணம் தொடையில் துளையிடப்பட்டு ரத்த நாளம் வழியாக இதயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இதயத்தின் மேல் அறையின் நடுவில் உண்டாகியிருந்த துளையில் பொருத்தப்பட்டது. பின்னா் இரு அறைகளுக்கும் இடையே கலந்துகொண்டிருந்த ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னா் அந்த வயதான ஆணை பிரத்யேக இதய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி தீவிர கண்காணிப்பில் 24 மணி நேரம் சிகிச்சை அளித்தனா்.
இதுதொடா்பாக, சேலம் காவேரி மருத்துவமனை தலைமை இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் ராஜேந்திரன் கூறுகையில், சமீப காலங்களில், இது போன்ற பிறவி இதயக் குறைபாடுகள் முதியவா்களில் பாதிப்பை ஏற்படுத்துவது இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் மருத்துவ வளா்ச்சியால் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.
சேலம் காவேரி மருத்துவமனை இதய சிகிச்சைப் பிரிவில் அதிநவீன கருவிகள் மற்றும் கைதோ்ந்த மருத்துவ குழுவினா் உள்ளனா் என்றாா்.