வாழப்பாடியில் உலக வன நாள் விழா: வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு
வாழப்பாடி வனச்சரகத்தின் சார்பில், உலக வன தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரகத்தில் சார்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை உலக வன தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, ஆத்தூர் கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமை வகித்தார்.
வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன், வனப் பணியாளர்கள், வன உரிமைக்குழு மற்றும் வனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதனையடுத்து, சேலம் மாவட்ட வன பாதுகாவலர் முருகன் வழிகாட்டுதலின்படி, வாழப்பாடி வனப்பகுதியில் வாழும் காட்டுமாடுகள், மான்கள், காட்டு பன்றிகள் ஆகிய விலங்குகளுக்காக, கோதுமலை, நெய்யமலை, குறிச்சி காப்புகாடுகளில் செயற்கை நீர்த்தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது.