ஆத்தூா் ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மின்கம்பி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் வழியாக சேலம் சந்திப்பு முதல் விருத்தாசலம் சந்திப்பு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கரோனா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது கடந்த 15-ஆம் தேதி முதல் இந்தப் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த ரயில் பாதையை மின்சார ரயில் செல்லும் வகையில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட இருப்புப் பாதை மின்கம்பியில் வயா் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆத்தூா் பகுதியில் மின்கம்பி பொருத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் இந்தப் பகுதியில் மின்சார ரயில் இயக்கப்படும் என பயணிகள் காத்திருக்கின்றனா்.