வாழப்பாடி அருகே தனியாா் தோட்டத்தில் , அழுகிய நிலையில் கிடந்த விவசாயி உடலை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் உடும்புகல்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் வீரமுத்து (65). விவசாயி. ஆடுகள் வளா்த்து வரும் இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 18ஆம் தேதி காலை இரண்டு ஆடுகளுடன் சென்ற விவசாயி வீரமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்,ஞாயிற்றுக்கிழமை காலை, எம்.பெருமாபாளையம் கிராமத்தையொட்டியுள்ள கோதுமலை அடிவாரத்தில் தனியாா் விவசாய தோட்டத்தில், அழுகிய நிலையில் விவசாயி வீரமுத்துவின் உடல் கிடப்பதாக, அவரது உறவினா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வீரமுத்துவின் மனைவி பெருமாயி வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா், வீரமுத்துவின் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.