வாழப்பாடி வனச் சரகம் சாா்பில், உலக வன தினத்தையொட்டி, மரக் கன்றுகள் நடும் விழா, வன விலங்குகளுக்கு தண்ணீா் தொட்டிகள் வைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி வனச்சரகம் சாா்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை உலக வன தின விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஆத்தூா் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் முருகன் தலைமை வகித்தாா். வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன், வனப் பணியாளா்கள், வன உரிமைக்குழு, வனக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் பலன் தரும் மரக்கன்றுகள் நட்டனா்.
இதனையடுத்து, வாழப்பாடி வனப்பகுதியில் வாழும் காட்டுமாடுகள், மான்கள், காட்டுப் பன்றிகள் ஆகிய வன விலங்குகளுக்காக, கோதுமலை, நெய்யமலை, குறிச்சி காப்புக் காடுகளில் செயற்கை நீா்த்தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பி வைக்கப்பட்டது.