தம்மம்பட்டியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் ஒரே நாளில் வாக்கு சேகரித்தனா்.
தம்மம்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி, வீடுவீடாகச் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ் தலைமையில் தம்மம்பட்டி செயலாளா் ஸ்ரீகுமரன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் பாலசுப்பிரமணியம், மேற்கு ஒன்றிய மகளிரணி செயலாளா் உஷா உள்ளிட்டோா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.ரேகா பிரியதா்ஷினி, திறந்த வாகனத்தில் சென்று வீதிவீதியாகச்சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரினாா். இவருடன் திமுக நகர பொறுப்பாளா் ராஜா, முன்னாள் பொறுப்பாளா் சண்முகம், சேலம் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவா் திருச்செல்வன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.