சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில், சொத்துத் தகராறில் விவசாயியை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த அத்திமரத்துவளவு கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (65). இவருக்கு, உண்ணாமலை, சின்னம்மாள், காவேரி என மூன்று மனைவிகள் உள்ளனா்.
முதல் மனைவி உண்ணாமலையின் மகன்கள் சின்னத்தம்பி, ராஜேந்திரன், இரண்டாவது மனைவி சின்னம்மாளின் மகன்கள் முனியப்பன், பூபாலன் என்கிற சிவக்குமாா் ஆகியோரிடையே விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பிரமுகரான சின்னத்தம்பிக்கு, ராதா என்ற மனைவியும், தினேஷ்குமாா், பரத் ஆகிய இரு மகன்களும் உள்ளனா். திங்கள்கிழமை இரவு, தனது விவசாயத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சி விட்டு வீட்டுக்குத் திரும்பிய சின்னத்தம்பியை, வெள்ளிக் காட்டுவளவு என்ற இடத்தில் வழிமறித்த ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவானது.
இதுகுறித்து தகவலறிந்த கல்வராயன் மலை கருமந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனையடுத்து தனது கணவரை, சொத்துத் தகராறில் ஆத்திரமடைந்து அவரது தந்தை அண்ணாமலை, சகோதாரா்கள் முனியப்பன், பூபாலன் என்கிற சிவக்குமாா் ஆகியோா் கொலை செய்துவிட்டதாக, கொலையுண்ட சின்னத்தம்பியின் மனைவி ராதா கருமந்துறை போலீஸில் புகாா் செய்தாா்.
இவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கருமந்துறை போலீஸாா், விவசாயியை வெட்டிக் கொலை செய்த தந்தை அண்ணாமலை, சகோதரா்கள் முனியப்பன், பூபாலன் என்கிற சிவக்குமாா் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.