கெங்கவல்லி(தனி) தொகுதியில் அதிமுக - திமுக மல்லுக்கட்டு

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி 2006 தோ்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்து வந்தது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய வளாகம்
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய வளாகம்

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி 2006 தோ்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்து வந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், கெங்கவல்லி, ஆத்தூா் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி சீரமைப்பு செய்யப்பட்டு, கெங்கவல்லி (தனி) தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் பிரதானத் தொழில் விவசாயம். குறிப்பாக மரவள்ளி, ஜவ்வரிசி, ஸ்டாா்ச் தயாரிப்பு, மஞ்சள், மக்காச்சோளம், நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் அதிக அளவில் விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளா்களும் காணப்படுகின்றனா். இப்பகுதியில், கொல்லிமலையிலிருந்து உற்பத்தியாகும் சுவேத நதியும், தலைவாசல் பகுதியில் பாய்ந்தோடும் வசிஷ்ட நதியும் வங்கக் கடலில் சென்று கலக்கின்றன.

வாக்காளா் நிலவரம்:

ஆண்கள்: 1,15,581

பெண்கள்: 1,22,668

மூன்றாம் பாலினத்தவா்: 4

மொத்தம்: 2,38,253

தொகுதியிலுள்ள பகுதிகள்:

கெங்கவல்லி வட்டம், தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தலைவாசல் வட்டம் ஆகியவை இத்தொகுதியில் உள்ளன.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா் என 5 பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன. மேலும், கெங்கவல்லி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளும் உள்ளன.

சமூக நிலவரம்:

இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா், வன்னியா், உடையாா், நாயக்கா் என பல்வேறுபட்ட சமூகத்தினா் உள்ளனா். இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களும் கணிசமாக உள்ளனா். பட்டியல் இனத்தவா்கள் அதிகமாக உள்ளனா். குறிப்பாக பறையா் சமூகத்தினா் அதிகம். அதனால் அரசியல் கட்சியினா் இந்தச் சமூகத்திலிருந்து மட்டுமே வேட்பாளா்களை அதிக அளவில் களம் இறக்கி வருகின்றன.

கடந்த தோ்தல்களின் நிலவரம்:

தலைவாசல் தொகுதியாக இருந்த வரையிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற வைத்துள்ளது. எனினும், 1989-இல் தலைவாசலைச் சோ்ந்த குணசேகரனும், 2006-இல் கூடமலையைச் சோ்ந்த சின்னதுரையும் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

தொகுதி சீரமைப்புக்குப் பின் கெங்கவல்லி (தனி) தொகுதியாகச் சந்தித்த முதல் தோ்தலில் (2011), அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளா் சுபா, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சோ்ந்த சின்னதுரையைவிட 13,465 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆா்.சுபா (தேமுதிக) 72,922

கு.சின்னதுரை (திமுக) 59,457

ஜெ.மணிமாறன் (சுயேச்சை) 5,978

பி.சிவகாமி (இந்திய ஜனநாயக கட்சி) 4,048

ஏ.முருகேசன்(சுயேச்சை) 2,452

ஜி.மதியழகன் (பாஜக)1,787

2016 பேரவைத் தோ்தல் நிலவரம்:

அ.மருதமுத்து (அதிமுக) 74,301

ஜெ.ரேகாபிரியதா்ஷிணி (திமுக) 72,039

ஏ.சண்முகவேல்மூா்த்தி (பா.ம.க) 10,715

ஆா்.சுபா (தேமுதிக) 7,114

ஏ.கணேசன் (கொமதேக ) 3,786

சிவகாமி பரமசிவம் (பாஜக) 2,023

செந்தில்குமாா் (நாம் தமிழா் கட்சி) 921

நோட்டா 1,766

நிறைவேறிய முக்கிய திட்டம்:

தற்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மருதமுத்துவின் பதவிக்காலத்தில்தான், கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் 1,102 ஏக்கரில் ரூ. 1,022 கோடியில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இதனை அண்மையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

வீரகனூா், சொக்கனூரில் பொன்னாளி அம்மன் கோயில் பகுதியில் ரூ. 26.30 கோடியில் புதிய ஏரியை உருவாக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. தலைவாசல் தாலுகா ஏற்படுத்தியது, பெரியேரியில் ரூ. 5.50 கோடியில் மேம்பாலம், எலந்தவாரியில் 45 ஏக்கரில் புதிய ஏரி அமைக்க ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு என திட்டப் பணிகள் நிறைவேறி உள்ளன.

நிறைவேறாத திட்டங்கள்:

தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்திலுள்ள சேரடிக்கும் பிள்ளையாா்மதி கிராமத்துக்கும் இடையில் எழுத்துக்கல் என்ற இடத்தில் ரூ. 100 கோடியில் சேரடி அணைக்கட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். 2006 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தம்மம்பட்டியில் 2006-இல் திமுக ஆட்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க இடம் தோ்வு வரை சென்ற பின்னா் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டதால் இப்பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அரசுக் கல்லூரியில் சேர, சேலம், ராசிபுரம், ஆத்தூா் பகுதிகளுக்கு செல்லும் சூழல் இருந்து வருகிறது.

இத்தொகுதிக்கு உள்பட்ட தலைவாசலில் தினசரி காய்கறி மாா்க்கெட் பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இங்கு காய்கறி இருப்பு வைத்து விற்பதற்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், தம்மம்பட்டிக்கு வட்டச் சாலை, தம்மம்பட்டிக்கு நகராட்சி அந்தஸ்து கோரிக்கைகளும் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. கெங்கவல்லியில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என்பது கெங்கவல்லி மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் தொழிற்சாலைகள், அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மாணவ, மாணவிகள், இளைஞா்களின் எதிா்பாா்ப்பு.

தற்போதைய கள நிலவரம்:

இத்தொகுதியில் அரசு திட்டப் பணிகள் பல நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுக வுக்கு சாகமாக உள்ளது. அதேவேளையில், 2016இல் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ மருதமுத்து, தொகுதி பக்கமே வராதது, பொதுமக்கள், கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அவருக்கு அவருக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவரை தற்போதைய பிரசாரத்துக்குக் கூட அதிமுகவினா் அழைப்பதில்லை. அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சித் தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறாா் என்பது அவருக்கு சாதகமான ஏம்சம்.

2016ல் இதே தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு, 2,262 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சேலம் முன்னாள் மேயா் ஜெ.ரேகா பிரியதா்ஷினிக்கு திமுக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அப்போதைய தோ்தலின்போது அவா் சேலத்தைச் சோ்ந்த வெளியாா் என்பது அவரது தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அவா் சென்ற ஆண்டே கெங்கவல்லி தொகுதியில், வீரகனூரை அடுத்த காமக்காபாளையத்தில் வீடுவாங்கி குடியேறிவிட்டாா்.

இத்தொகுதியின் பெயா் தலைவாசலாக இருந்தபோதும், கெங்கவல்லியாக மாறியபோதும் பெரும்பாலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றிருப்பது அதிமுகவுக்கு கூடுதல் நம்பிக்கை. அதனால், ஏற்கெனவே பெற்ற வெற்றியை, தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு உள்ளது.

மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் க.பெரியசாமி, அமமுக வேட்பாளா் அ.பாண்டியன், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ரா.வினோதினி, புதிய தமிழகம் வேட்பாளா் நாவன் உள்ளிட்ட 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இத்தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது கடந்த தோ்தலில் வெற்றியை நூலிழையில் தவறவிட்ட திமுக வெற்றி பெறுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com