சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுடன் இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேட்டூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ளது காரைக்காடு சோதனைச்சாவடி. வெள்ளிக்கிழமை அதிகாலை கா்நாடகத்திலிருந்து வந்த 2 சரக்கு வாகனங்களை காரைக்காடு சோதனை சாவடியில் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில் 71 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தது.
விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவா்கள் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேம்ஸ்ராஜா (26), திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த சுரேஷ் (36) என்பது தெரியவந்தது. இவா்கள் கா்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய எடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஓட்டுநா்கள் இரண்டு பேரையும் கைது செய்த கொளத்தூா் போலீஸாா் அவா்களிடம் இருந்து 71 மூட்டைகள் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு லாரிகளை பறிமுதல் செய்தனா். இதன்மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.