சங்ககிரி தொகுதியில் வெற்றி பெறுபவர் சார்ந்துள்ள கட்சியே தமிழகத்தை ஆளும் கட்சியாக வரும் என்ற செட்டிமெண்ட் மாறியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர் சார்ந்துள்ள அரசியில் கட்சியே இது வரை தமிழகத்தை ஆளும் கட்சியாக வந்துள்ளது என அரசியல் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் நடந்து முடிந்த சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்றது ஒரு கட்சியாகவும் ஆளுகின்ற கட்சி வேறு ஒன்றாகவும் முதன்முதலாக மாறியுள்ளது அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1957 வரும் முதல் 2016 வரை 14 தேர்தலை எதிர்கொண்ட சங்ககிரி தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1967 ஆர்.நல்லமுத்து (திமுக), 1971 வி.முத்து (திமுக), 1977 பி.தனபால்(அதிமுக), 1980 பி.தனபால்(அதிமுக), 1984 பி.தனபால்(அதிமுக), 1989 ஆர்.வரதராஜன்(திமுக), 1991 வி.சரோஜா (அதிமுக), 1996 வி.முத்து (திமுக), 2001 பி.தனபால் (அதிமுக), 2006 வி.பி.துரைசாமி(திமுக), 2011 விஜயலட்சுமிபழனிசாமி (அதிமுக), 2016 எஸ்.ராஜா(அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஒவ்வொரு முறையும் சங்ககிரி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெறுவர் சார்ந்த அரசியில் கட்சியே தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சுந்தரராஜன் வெற்றி பெற்றார். அவர் சார்ந்த அதிமுக பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க இயலவில்லை. அதற்கு மாற்றாக திமுக தமிழகத்தை ஆளும் கட்சியாக மாறியுள்ளது.
இந்நிலையில் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் சார்ந்த கட்சியே தமிழகத்தை ஆளும் கட்சியாக வரும் என்ற சென்டிமெண்டை தற்போது நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மாற்றம் செய்துள்ளதை அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.