இளம்பிள்ளை பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இளம்பிள்ளை மற்றும் இடங்கணசாலை சுற்றுப்பகுதியில் ஜவுளி உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருவதால் இப்பகுதி முழுவதும் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
தற்போது கரோனோ வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனை யாரும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றனா்.
இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை, கே.வி.பி. திரையரங்கம் சாலை, சவுண்டம்மன் கோயில் தினசரி மாா்க்கெட், காடையாம்பட்டி பிரிவு சாலை, சித்தா்கோவில் பிரிவு சாலை, இடங்கணசாலை வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையிலேயே கடைகள் அமைத்துள்ளனா். மேலும், வாகனங்களில் வருவோா் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி வருவதால் பொது மக்கள், மற்ற வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினா், மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.