தம்மம்பட்டி பகுதியில் உள்ள, அனைத்து ரேசன் கடைகளிலும் போலி ரேசன் கார்டுகள் அதிகம் உள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகமுதல்வர் ஸ்டாலின், கரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். தற்போது, முதற்கட்ட நிவாரணமாக, ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தம்மம்பட்டி மற்றும், செந்தாரப்பட்டி. கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, ஜங்கமசமுத்திரம், மூலப்புதூர், தகரப்புதூர், மண்மலை பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ரேசன் கடைகளிலும், கணிசமான அளவு, போலி ரேசன் கார்டுகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போலியான ரேசன் கார்டுகளை முழுவதும் கண்டுபிடிக்காத நிலையில், அவற்றிக்கு வழங்கப்படும் நிவாரண நிதி மூலம், பெரும் அளவில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது, 'கெங்கவல்லி தாலுகாவில், கரோனா நிவாரண நிதியை முழுவதுமாக, கொடுப்பதற்கு முன்,வருவாய்த்துறையினர், போலி ரேசன் கார்டுகள் உள்ளனவா என்று, அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றனர்.