வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கானோர் இறப்புக்கு ஒப்பாரிப் பாட்டுப்பாடி ஆட்டமாடிய நாட்டுப்புறக் கலைஞர் ப.அக்கு காலமானார். இவரது மறைவால் தமையனுார் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் முதியவர்கள் இறந்து போனால், அவர் இறந்ததில் இருந்து இடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை, அவரது வீட்டிற்கு நாட்டுப்புற கலைஞர்களை வரவழைத்து, தப்பாட்டம், பறை, மேளவாத்தியங்கள் முழங்க ஒப்பாரிப் பாட்டுடன், ஆட்டம் ஆட வைப்பது இன்றளவும் வழக்கமாக இருந்து வருகிறது.
வாழப்பாடி அடுத்த தமையனுார் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான ப.அக்கு (66) என்பவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், துக்க நிகழ்வுகளில் பங்கேற்று, ஓப்பாரிப்பாடலுடன் ஆட்டமாடி வந்தார். வாழப்பாடி பகுதியில் எந்த கிராமத்தில் துக்க நிகழ்வென்றாலும் அக்குவின் குரலில் ஒப்பாரிப்பாடல்களும், கால்களில் சலங்கையுடன் அவரது ஆட்டமும் இடம்பெறும்.
ஒலிப்பெருக்கியிலும் இவரது குரல் முழங்கும். அழிந்து வரும் ஒப்பாரிப் பாடல்களுக்கும், முராரி ஆட்டத்திற்கு பெயர்பெற்ற அக்கு, கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினத்திற்கு முன் காலமானார். ஆயிரக்கணக்கானோர் இறப்புக்கு ஒப்பாரிப்பாடி ஆட்டமாடி அடக்கம் செய்யும் வரை பங்கேற்ற இவரது இறுதிச்சடங்களில், கரோனா பெருந்தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் பெருமளவில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியவில்லை.
இவரது உறவினர்களை அடக்கம் செய்துவிட்டனர். நாட்டுப்புற கலைஞர் அக்குவின் மறைவு, இவரது உறவினர்கள் மட்டுமின்றி, தமையனுார் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.