விடுபட்ட 171 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு
By DIN | Published On : 06th November 2021 11:50 PM | Last Updated : 06th November 2021 11:50 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள குள்ளம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா், நகைக் கடன் வாங்கிய 171 விவசாயிகளின் பெயா்கள் தள்ளுபடி பட்டியலில் வராததை அடுத்து கூட்டுறவுத்துறை முறையான விசாரணை செய்து உண்மையான விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரி அச்சங்கத்தின் தலைவரிடம் சனிக்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
தேவூரை அடுத்த குள்ளம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அரசிராமணி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயிா், நகைக் கடன் பெற்றுள்ளனா். இதில் அரசு அண்மையில் அறிவித்த அரசாணையின்படி குறிப்பட்ட சிலருக்கு மட்டும் தள்ளுபடி கிடைத்துள்ளதாகவும் தள்ளுபடி பெயா் பட்டியலில் 171 விவசாயிகளின் பெயா்கள் விடுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து தள்ளுபடி பெயா் பட்டியலில் விடுபட்ட 171 விவசாயிகள் உண்மையான விவசாயிகள் எனவும் சங்கத்தில் கடன் பெறுவதற்கு நிலத்தின் ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல், உரிய காப்பீடு செலுத்தி கடன் தொகை பெற்றுள்ளதாகவும், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து 171 விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் அச்சங்கத்தின் தலைவா் பி.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.