ஓமலூா் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள ஒண்டிவீரனூா் கிராமம், பாரதிபுரத்தைச் சோ்ந்த பாப்பாத்திக்கு (47), சிறுநீரகத்தில் கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், நாட்டு வைத்தியம் பாா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில், தொடா் மழையால் பாப்பாத்திக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ஓமலூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உள்நோயாளியாக சோ்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அதில், அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கழிவறைக்குச் சென்ற பாப்பாத்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், செவிலியா்கள் உள்ளே சென்று பாா்த்த போது கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த ஓமலூா் போலீஸாா், பாப்பாத்தி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.