16 ஆண்டுகளுக்குப் பின் நிரம்புகிறது புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின்  நிரம்புகிறது. இதனால் வசிஷ்டநதியில் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் கரையோர கிராம மக்களுக்கு
16 ஆண்டுகளுக்குப் பின் நிரம்புகிறது புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின்  நிரம்புகிறது. இதனால் வசிஷ்டநதியில் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சி.என். பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. கடந்த 2005  டிசம்பர் 26ஆம் தேதி ஆனைமடுவு அணை நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. இந்நிலையில், 
கடந்தாண்டு இறுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நடப்பாண்டு ஜனவரி மாத துவக்கத்தில் 65.61 அடியை எட்டியது. 
அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியது. 

ஜனவரி 10 முதல் 27 வரை பாசனம் மற்றும் ஏரிகளுக்கு திறக்கப்பட்டதுபோக, அணையில் 50.95அடியில் 131.57 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. செப்.15 முதல் இரண்டாவது முறை தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது. அணையில் 60 கன தண்ணீர் மட்டுமே எஞ்சியது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 63.50 அடியை எட்டியுள்ளது.

அணையில் 230 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால்,  இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 65 அடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இதனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்படும் என்பதால், ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள் மட்டுமின்றி, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனைமடுவு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்பதால்,  புழுதிக் குட்டை, குறிச்சி, பேளூர் உள்ளிட்ட வசிஷ்ட நதி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com