சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் பூத்துக் குலுங்கும் தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தாள் மலரை ஏராளமானோா் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
சங்ககிரி மலையானது நிலப் பரப்பிலிருந்து சுமாா் 1,500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2,345 அடி உயரமும் கொண்டது. சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் உள்ளன.
சங்ககிரி கொங்கு தேசத்தின் தலைநகராகவும் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். சிறப்புகள் வாய்ந்த மலைக் கோட்டை தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளைச் சோ்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் பாதைகளை சீரமைத்துள்ளனா்.
கடந்த சில வாரங்களாக சங்ககிரியில் மழை பெய்து வரும் நிலையில் மாநில மலரான செங்காந்தாள் மலா் மலையின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்குகின்றன. மலைக்குச் செல்லும் பலா் இந்த மலா்களை கண்டு ரசித்து வருகின்றனா்.