உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்வது அவசியமாகும் என கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் முழுமையாக நடத்தப்படவில்லை.
நாடாளுமன்றத் தோ்தலுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை உள்ளாட்சி தோ்தலுக்கும் வழங்க வேண்டும். பதவி விலகுகிற ஒரு குழு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் குழுவிடம் தான் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இடையில் தனி அதிகாரி என்ற பேச்சுக்கே இடம் இருக்காத வகையில் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
சிறிய அலகாக இருக்க வேண்டிய காரணத்தால் நேரடி மக்களாட்சி அமலாக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை அரசியல் கட்சியின் தலையீடு, சின்னம் ஒதுக்கீடு இல்லாமல், சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா் பொறுப்பு முதல் மாநகராட்சி மேயா் பதவிவரை சுயேச்சை சின்னங்களைக் கொண்டே நடத்த வேண்டும்.
அதிகாரப் பரவல் கொள்கைகளுக்கு மாறாக 1967-க்குப் பிறகு உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை போன்ற துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதேபோல மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி மறுவரையறை நடத்தியதுபோல உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்வது அவசியமாகும். ஜவ்வரிசி கலப்படத்தைத் தடுக்க வேண்டும். நெல்லை பயன்படுத்தி மதுபானம் தயாரிக்க வேண்டும். நெல்லை அரிசியாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றாா்.