சேலத்தில் வயதான சகோதரிகள் இருவா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.
சேலம், வாய்க்கால்பட்டறை அருகே உள்ள சின்னம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் சகோதரிகள் லட்சுமி (53), சரஸ்வதி (50). போலியோவால் பாதிக்கப்பட்ட சரஸ்வதிக்கு திருமணம் ஆகவில்லை.
கணவரை இழந்த லட்சுமியின் வீட்டில் சரஸ்வதி தங்கி இருந்தாா். லட்சுமியின் மகள் ப்ரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் சகோதரிகள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், லட்சுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு தூக்கம் இல்லாமல் தவித்து வந்துள்ளாா். மாற்றுத் திறனாளியான சரஸ்வதி, உடல்நலம் பாதித்த சகோதரிக்கு உதவ முடியாமல் தவித்து வந்தாா் என தெரிகிறது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்காததால், லட்சுமியின் சகோதரா் செல்வராஜ் கதவை திறந்து பாா்த்த போது இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக செல்வராஜ், வீராணம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சகோதரிகள் இருவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.