மேட்டூர் அருகே கனமழைக்கு பல ஆயிரம் வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகளின் முக்கிய பயிர்களில் வாழை முக்கியமானது. கதலி, பூவன், தேன் வாழை உள்ளிட்ட வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழை மைசூர், பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வாழைப்பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
தற்பொழுது வாழை இப்பகுதியில் பலன் தரும் நிலையில் இருந்தது. நேற்று இரவு கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் விராலிகாடு, மூலக்காடு, அச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் வாழை விவசாயிகளுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வேளாண் துறையும் வருவாய்த் துறையும் உரிய முறையில் கணக்கிட்டு தங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொளத்தூர் வட்டார வேளாண்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் அளித்தும் வரவில்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். வாழை சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.