சேலம்: ஆயுத பூஜையையொட்டி பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் அடுத்தடுத்து ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி பண்டிகைகள் வருவதால் இன்றைய தினம் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வஉசி பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். தொடர் பண்டிகை காரணமாக பூக்களின் விலை 2 முதல் 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் விலை உயர்வை பொருட்படுத்தாது தேவையான பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரசின் தீவிர நடவடிக்கையால் சற்று குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு இப்பகுதியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்களால் மீண்டும் நோய்த் தொற்று பரவும் அபாயம் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டுமல்லி 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்கும், சாமந்தி பூ 240 ரூபாய் ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் நோய் தடுப்பு அறிவிப்புகளை அறிவித்த போதிலும் பொதுமக்கள் காதில் வாங்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பல மடங்கு உயரும் அபாயம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.