எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.
கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, மொரசபட்டி சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீரென பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், எடப்பாடி நகர்ப்புற பகுதியினை ஒட்டிய ஒரு சில இடங்களிலும் மிக கனமழை கொட்டியது.
இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. பூலாம்பட்டி பகுதியில் மேட்டூர் பிரதான சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தன.
இதையும் படிக்க | கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால் பால் வினியோகம், காய்கறிகள் விற்பனை உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பணிகள் பாதிப்பிற்கு உள்ளானது. கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருவதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.