மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதரில் ரத்த காயங்களுடன் பெண் கொலை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் பள்ளக்கானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவர் தேங்காய் நார் மண்டியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெரியக்கா(37) இவரும் அதே தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் வேலை செய்து வந்தார்.
தேங்காய் மண்டியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வரும் சுரேஷ் (30)என்பவருடன் பெரியக்காவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து சென்ற பெரியக்கா வீடு திரும்பவில்லை. வீட்டிற்கு பின்னால் இருந்த புதரில் நிர்வாண நிலையில் சடலமாக ரத்த காயங்களுடன் கிடந்தார்.
இதுகுறித்து ஜலகண்டபுரம் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜலகண்டபுரம் போலீசார் வழக்குப் பதிந்து பெரிய அக்காவின் கணவர் ராஜேந்திரனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமறைவாக உள்ள ஓட்டுநர் சுரேஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.