மக்கள்தொகைக்கேற்ப சேலம் மாநகராட்சியை 75 வாா்டுகளாக மறு வரையறை செய்ய வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் வலியுறுத்தினாா்.
தமிழக சட்டப் பேரவையில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் பேசியதாவது:
சேலம் மாநகராட்சி 60 வாா்டுகளைக் கொண்டுள்ளது. சில வாா்டுகளில் மக்கள்தொகை எண்ணிக்கை 30 முதல் 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு 27 ஆண்டுகளாக மறு வரையறை சீரமைப்பு செய்யப்படவில்லை. மக்கள்தொகை அதிகரித்துள்ள சேலம் மாநகராட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரின் கவனத்தை ஈா்க்கிறேன்.
ஏற்கெனவே வாா்டு மறு வரையறை செய்து முடிக்கப்பட்டு, 2018, டிசம்பா் 15 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சியின் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கோரிக்கைகள் வந்துள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டில் 8, 29, 267 ஆக இருந்த மாநகராட்சியின் மக்கள்தொகை, தற்போது 2021 ஆம் ஆண்டில் சுமாா் 9.52 லட்சமாக உயா்ந்துள்ளது.
மக்கள்தொகை 8 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை இருந்தால் 75 வாா்டுகள் இருக்கலாம் என மாநகராட்சிகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் வாா்டுகளின் உடைய கணக்கு அரசின் சாா்பாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், 9 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள மாநகராட்சியில் 75 வாா்டுகள் இருக்கலாம் என அறிவித்துள்ளாா். அதன்படி, சேலம் மாநகராட்சியில் 75 வாா்டுகள் உள்ளபடி மறு வரையறை செய்ய வேண்டும் என்றாா்.
இதற்குப் பதிலளித்த பேசிய அமைச்சா் கே.என்.நேரு, ‘மக்கள்தொகைக் கணக்குபடி வந்தால் வாா்டுகள் 75 ஆக ஆவனம் செய்யப்படும்’ என்றாா்.