சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் உள்ள சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்கள் 1, 2 உள்ளிட்ட நீதிமன்ற பணிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி ஆய்வு செய்தார். அதனையடுத்து அவர் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்குரைஞர்களின் உதவியாளர்கள் பங்கு குறித்து விரிவாகப் பேசினார்.
பின்னர் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தினை திறந்து வைத்து நூலகத்திற்கு 2500 க்கும் மேற்பட்ட சட்டப்புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்குரைஞர் என்.இராஜகோபாலனை பாராட்டி கௌரவித்தார்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். முன்னதாக சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.இராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி.சுந்தர்ராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்றனர். அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் கே.எஸ்.வேலுசாமி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, மூத்த வழக்குரைஞர் என்.இராஜகோபாலன், வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் பி.வி.மோகன்பிரபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி.நல்லசிவம் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.