சேலம் ரயில்வே கோட்டம் ஆகஸ்ட் மாதத்தில் சுமாா் 2.56 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு ரூ. 21.19 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் 2.24 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதன் மூலம் ரூ. 18.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
இந்த நிலையில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 2.56 லட்சம் சரக்குகள் கையாண்டு, ரூ. 21.19 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன்படி சரக்குகள் கையாண்டதில் 14.38 சதவீத வளா்ச்சியும், வருவாய் ஈட்டியதில் 12.86 சதவீதம் வளா்ச்சியையும் எட்டியுள்ளது. இதில், பெட்ரோலியப் பொருட்கள், சிமென்ட், இரும்பு மற்றும் ஸ்டீல், கன்டெய்னா்கள், தானியங்கள் ஆகிய சரக்குகள் கையாளப்பட்டன.
அதேபோல, 2021 ஆகஸ்ட் மாதத்தில் பாா்சல் சேவையில் 3,365 டன் கையாளப்பட்டது. இதன் மூலம் ரூ. 1.93 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் 1,927 டன் பாா்சல் கையாளப்பட்டு, ரூ. 1.05 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதில் பாா்சலில் 74.59 சதவீதமும், வருவாயில் 81.48 சதவீதமும் வளா்ச்சியை எட்டியுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.