எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 1200 மூட்டை பருத்தி ரூ. 26 லட்சத்துக்கு விற்பனையானது.
பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்திருந்த 1,200 பருத்தி மூட்டைகள் 300 லாட்டுகளாகப் பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விட்டனா். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு மொத்த கொள்முதல் செய்தனா். இதில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,600 முதல் ரூ. 10,100 வரை விலைபோனது. அதேபோல பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,450 முதல் ரூ. 8,100 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது. பருத்திக்கு கடந்த வாரத்தை விட சற்றே கூடுதலான விலை கிடைத்ததாக ஏலத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறினா்.
இம்மையத்தில் அடுத்த பொது ஏலம் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.