புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்துக்குத் திறப்பு

வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் பாசனத்திற்கு தண்ணீா்த் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள்.
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் பாசனத்திற்கு தண்ணீா்த் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள்.

வாழப்பாடி: வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலை பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.

இந்நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிா்பாா்த்த அளவிற்கு வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக ஆனைமடுவு அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்-டிசம்பா் வரை மாதத்தில், நீா்பிடிப்புப் பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 65.61 அடியை எட்டியுள்ளது. அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீா்த் தேங்கியது.

நிகழாண்டு முதல் போகத்திற்கு திறக்கப்பட்டதுபோக, அணையில் தற்போது 50.95அடி அளவில் 131.57 மில்லியன் கன அடி தண்ணீா்த் தேங்கியுள்ளது.

இந்நிலையில், அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வேண்டும் என, அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள், ஆறு, ஏரிப் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பொதுப்பணித் துறை வாயிலாக தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அணையிலிருந்து புதன்கிழமை முதல் நொடிக்கு 60 கன அடி வீதம் ஆறு மட்டும் ஏரி பாசனத்துக்கும் நிலத்தடி நீா்மட்டம் உயரவும் தொடா்ந்து 12 நாள்களுக்கு வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்க்கவும் அணை வலது மற்றும் இடது வாய்க்கால் பாசனத்துக்கு 27-ஆம் தேதியிலிருந்து தொடா்ந்து 9 நாள்களுக்கு நொடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, புதன்கிழமை காலை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆத்தூா் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளா் கவிதா ராணி, புழுதிக்குட்டை ஆனைமடுவு உதவி பொறியாளா் விஜயராகவன், குருச்சி சிதம்பர உடையாா் பாசன சங்கத்தலைவா் கே.பி.சண்முகம், அத்தனூா்பட்டி ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கைலாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com