எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டார பெருமாள் ஆலயங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையில், பக்தர்களுக்கு அனுமதியின்றி அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறையினர் மட்டுமே சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலய வளாகத்தில் உள்ள பாலா ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமை காலை பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் பெருமானுக்கு வெற்றிலை மாலை துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உற்சவமூர்த்தியான பூதேவி, ஸ்ரீதேவி சமேத நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோன்று வெள்ளூற்று பெருமாள் ஆலயம், சென்றாய பெருமாள் கோயில், வெள்ளைக்காரனை திம்மராய பெருமாள் கோயில், பூலாம்பட்டி அடுத்த கூடகல் மலை மாட்டு பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் அனுமதியின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.