தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதை விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி சோப்புமண்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 160 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சிலா் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்றுவருவதாக எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்-க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தம்மம்பட்டி எஸ்.ஐ.க்கள் சிவசங்கா், ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் நாகியம்பட்டி அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சோதனை நடத்தினா். அப்போது, சசிகுமாா் (24) என்பவரது வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை பதுக்கிய சசிகுமாரை திங்கள்கிழமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.