யூரியா உரத்தை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்ததையடுத்து, கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் சித்ரா வியாழக்கிழமை உரக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டாா்.
தம்மம்பட்டியிலுள்ள உரக் கடைகளில் யூரியா உரத்தை கடைக்காரா்கள் அதிக அளவில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தனா். புகாரின் பேரில், கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் சித்ரா தம்மம்பட்டி உரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதில், மூன்று உரக்கடைகளில் இருந்த இருப்புப் பதிவேடுகளில் உள்ளதைவிட, கூடுதலாக யூரியா உர மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த உரக்கடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், உர விற்பனைக்கு மூன்று நாள்களுக்கு தடை விதித்தாா். உர மூட்டைகளை பதுக்கினால், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தாா்.
அனைத்து உரக்கடைகளும் தினந்தோறும் இருப்புப் பதிவேடுகளை பராமரிக்கவும், உரம், பூச்சி மருந்துகளின் விலை விவரங்களை விவசாயிகளுக்கு தெரியும் வகையில், கடைகளின் வெளியே தகவல் பலகையில் வைக்கவும், பாயிண்ட் ஆப் சேல் இயந்திரம் மூலம் ரசீது தரவேண்டும் எனவும், இதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.