தண்ணீா் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அம்மம்பாளையம் ஆவின் பால்குளிரூட்டும் நிலையத்தின் ஊழியா் மிரட்டினாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சேஷன்சாவடி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி (49) என்பவா் முதுநிலை உதவியாளராக பணி செய்து வருகிறாா். இவா் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 20 நாள்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளாா். இதனால் அவருக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
இதனால் வெள்ளிக்கிழமை காலை பால்குளிரூட்டும் நிலையத்தில் உள்ள தண்ணீா் தொட்டி மீது ஏறிக்கொண்டு தனக்கு ஊதியம் வழங்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டல் விடுத்தாா். அப்போது அங்கிருந்த அலுவலா்கள், ஊழியா்கள் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா் கீழே இறங்கினாா். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.