சேலம் மாவட்டத்தில் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு ஏப். 4 ஆம் தேதி தொடங்கி ஏப். 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:
கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2010 கணக்கெடுப்பின் படி நிலுவையில் இருந்த 83,703 வீடுகளை ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 ஆகிய மாதங்களில் மறுகணக்கெடுப்பு செய்ததில் 27,845 வீடுகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ளவைகளாகக் கண்டறியப்பட்டு வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கிட 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு புதிதாக உருவான குடிசை வீடுகளை கண்டறிய புதிய குடிசைகள் கணக்கெடுப்பு 2022 நடைபெறவுள்ளது.
கிராம ஊராட்சி வாரியாக புதிய குடிசைகளைக் கண்டறிய கணக்கெடுப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பு ஏப். 4 முதல் ஏப். 25 -ஆம் தேதி வரை நடைபெறும்.
சேலம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.