எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
வாரந்தோறும் சனிக்கிழமை இம்மையத்தில் பருத்தி, நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கான பொது ஏலம் நடைபெறுகிறது. நிகழ்வாரத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமாா் 4,000 பருத்தி மூட்டைகள் 1,100 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில், பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,089 முதல் ரூ. 12,850 வரையும், டி.சி.ஹெச். ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,600 முதல் ரூ. 13,369 வரையும் விற்பனையானது. சனிக்கிழமை முழுவதும் நடைபெற்ற ஏலத்தில், ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. அடுத்த பொது ஏலம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.