தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து, இணைய வழியில் ரூ.1.09 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே பச்சமலை ஊராட்சி, மால்பள்ளியைச் சேர்ந்தவர் பூச்சி மகன் வேல்முருகன் (36) விவசாயி. ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று, இவரது செல்லிடைபேசி எண்ணிற்கு, ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், வங்கியில் ஆவண விவரங்களை புதுப்பிக்காத பட்சத்தில், கணக்கு முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதையடுத்து, மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு, குறுந்தகவலில் குறிப்பிட்டிருந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வங்கியின் கணக்கு விவரங்களை தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில், அவரது எஸ்.பி.ஐ. வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 9,999 ரூபாயை மர்ம நபர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த வேல்முருகன், சேலம் மாவட்ட சைபர் கிரைமில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.