சேலம்: சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செல்வதால் காவல்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பின் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாநகர பகுதியில் தலைக்கவசம் கட்டாயச் சட்டம் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மானகராட்சி பகுதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை முதல் தலைக்கவசம் கட்டாயச் சட்டம் சேலம் மாநகரில் அமலுக்கு வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்கின்றனர்.
அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தும் காவல்துறையினர், அவர்களை கண்டித்து எச்சரிப்பதோடு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தலைக்கவசம் அணியாவிட்டால் வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதன்படி, சேலம் ஏவிஆர் ரவுண்டனா ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகனத் தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: திருப்பூர் காவல் ஆணையராக பிரபாகரன் நியமனம்
இன்று மட்டும் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.