சேலம்: சேலம் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் மீண்டும் அதிக அளவில் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பத்திரமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, இன்று அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரின் அளவானது 1.40 இலட்சம் கன அடியாக உள்ளது. மேலும், இது 1.60 இலட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.